சொந்த கட்சிக்கு எதிரா இப்படியா பேசுவது..? சொந்த காசில் சூனியம் வைத்த நாஞ்சில் சம்பத்!
சென்னை: புதிய தலைமுறை டிவியின் 'அக்னிப் பரீட்சை' நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், நாஞ்சில் சம்பத் அளித்தப் பேட்டியை பார்த்தவர்களுக்கு, அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரா, அல்லது காலை வாரி விடும் செயலாளரா என்ற சந்தேகம் கண்டிப்பாக வந்திருக்கும்.
நாஞ்சில் பேட்டியை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பார்த்தால், நாஞ்சிலிடமிருந்து இன்னோவா காரை வாங்கிவிட்டு, கட்சியில் இருந்தும் அவரை வெளியேற்ற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவின் சில நிர்வாகிகள்.
பத்திரிகையாளர் நடராஜ் என்பவர் தொலைபேசி மூலம், தந்தி டிவியில், செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் தமிழக அரசு மீது குறை சொல்லப்போய், அது கட்சியிலுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி நட்ராஜ்தான் என்று நினைத்து கட்சியை விட்டு நீக்கியவர் ஜெயலலிதா. உண்மை தெரிந்த பிறகு மறுநாளே கட்சியில் சேர்க்கப்பட்டார்.
அப்படியிருக்கும்போது, நாஞ்சில் சம்பத்தின் பேட்டி அதைவிட அதிகமாக அதிமுகவை தாக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் சில துளிகள் இதோ:

ஜெயலலிதாவால் முடியவில்லை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரை கூட முதல்வர் பார்க்கவில்லையே என்ற கேள்விக்கு "அம்மாவால் முடியவில்லை. அதனால் வெள்ளம் பாதித்த மக்களை அவர் சந்திக்கவில்லை" என்று கூறினார் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருப்பதாக கூறிய கட்சி தலைவர்கள் மற்றும், ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரே, ஜெயலலிதாவால் இயலவில்லை என்று கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது.

யாரு எப்படி போனா என்ன..
வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவை ஆடம்பரமாக நடத்த வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு "மக்கள் வெள்ளபாதிப்பில் இருந்து மீண்டுவிட்டனர். சிலர் மெதுவாகத்தான் மீளுவார்கள். அதற்காக, நாங்கள் ஆடம்பரத்தை குறைக்க முடியாது. ஒரு வீட்டில் துக்கம் நடந்ததற்காக அடுத்த வீட்டில் கல்யாணம் நடக்கக்கூடாதா?" என்று கேட்டார் நாஞ்சிலார்.

அடியில் ஆப்பு
எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், இம்மாநில மக்கள் அனைவருமே தமிழக அரசுக்கு சொந்தம் என்னும் நிலையில், மக்கள் எப்படிப்போனால் என்ன, அது அடுத்த வீட்டு துக்க நிகழ்வு என்ற தோரணையில் நாஞ்சிலார் சொல்லி தனது கட்சிக்கு தானே பெரிய ஆப்பு வைத்துள்ளார்.

ஸ்டாலினுக்கு சர்டிபிகேட்
நாடாளுமன்ற தேர்தலின்போது கண்ணுக்கு எட்டியதூரம்வரை எதிரிகளே இல்லை என ஜெயலலிதா அறிவித்த நிலையில், இப்போது கூட்டணி பற்றி பேசுவது ஏன் என்பது குறித்த கேள்விக்கு "கண்ணுக்கு தெரியாமல் இருந்த அதிமுகவின் எதிரிகள், "ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணத்தால் முன்னேறி வந்துவிட்டார்கள். ஊடகங்கள் திமுகவுக்கு விளக்கு போட்டு முன்னேற்றம் காண வைத்துள்ளன" என்று ஸ்டாலின் பயணத்திற்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளார் நாஞ்சிலார்.

சந்தர்ப்பவாதம்
"திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்தொகை அதிகரித்துவிட்டதை சொல்லி அந்த கட்சியை தேர்தலில் வீழ்த்தினோம். இப்போது கடன் வாங்குவது உலக வழக்கமாகிவிட்டதால், தமிழகத்தின் கடன் அதிகரித்து இருப்பதை பற்றி கவலை வேண்டாம். கிரீஸ் நாடே கடனில் மூழ்கியுள்ளது. தமிழகம் எம்மாத்திரம்" என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்து, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் கட்சி மாறிக்கொள்வதாக மறைமுகமாக கூறியுள்ளார் நாஞ்சிலார்.

வீடும் வேண்டுமாம்
"தமிழக அரசின் நடவடிக்கைகளால், குடிசையில் இருந்தவர்களும் இப்போது குடியிருப்பு வீடுகளில் குடியிருக்கிறார்கள். வெள்ளம் பாதித்த மக்களுக்கு புதிய குடிசைமாற்று வீடுகள் கட்டித்தரும் தமிழக அரசின் திட்டத்தில் எனக்கு ஒரு வீடு கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக உள்ளது" என்று கூறி, தனக்கு இன்னோவா கொடுத்தது போதாது வீடும் வேண்டும் என்ற கோரிக்கையை தலைமைக்கு எதிராக கறாராக கேட்டுள்ளார் நாஞ்சிலார். ம்.. ஏற்கனவே நாஞ்சிலாருக்கு வாயால்தான் பிரச்சினை என்று நெட்டிசன்கள் சொல்கிறார்கள். இப்போது அது அவருக்கே திரும்பியுள்ளதாகவே தெரிகிறது.
|
நாஞ்சில் சம்பத் அண்ணா திமுக ஆளுதானா..
இதனிடையே ஒன்இந்தியா தமிழ் இணையத்தில் வெளியான, நாஞ்சில் சம்பத் பேட்டி தொகுப்புகளை முன்வைத்து, நெட்டிசன்கள் நாஞ்சிலாரை ரவுண்டு கட்ட ஆரம்பித்துள்ளனர். அதுகுறித்து பாருங்கள். "உண்மையிலேயே நாஞ்சில் சம்பத் அண்ணா திமுக ஆளுதானா இல்ல வேற கட்சி சிலீப்பர் செல்லா" என்று கேட்டுள்ளார் இந்த டிவிட்டர் பயனாளர். இந்த சந்தேகம், அதிமுகவினருக்கே வரத்தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
|
துதிபாடி!
"நாஞ்சில் சம்பத்தின் பிழைப்பு எப்போதும் ஜெ யைச்சுற்றியே! அன்று வசைபாடி, இன்று துதிபாடி! இரண்டிலும் வரம்புகள் மீறி! என்று கூறுகிறது இந்த டிவிட். மதிமுகவில் நாஞ்சிலார் இருந்தபோது, ஜெயலலிதா பற்றி விமர்சனங்களை முன்வைத்து வழக்குகளை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
அதிமுக பொதுக்குழு
"அதிமுக பொதுக்குழு ஆடம்பரமாக நடத்தப்பட்டதில் தவறு இல்லை - நாஞ்சில் சம்பத் #உங்களை மாதிரி ஆட்களை பேச விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் தவறே..!" என்கிறது இந்த டிவிட்.
|
ராஜதந்திரம்
"மதிமுகவ அழிக்க அத்தனை ராஜதந்திரம் பண்றாரு கலைஞர்னு வைகோ புலம்புறாரு. அதிமுகவ அழிக்க நாஞ்சில் சம்பத்த அனுப்புன ராஜதந்திரத்த விடவா பெருசு அது." என்று மதிமுகவில் இருந்து அதிமுகவை அழிக்கத்தான் நாஞ்சில் போயுள்ளார் என்று கூறுகிறது இந்த டிவிட்.
|
அதிமுக ஆடம்பரைத்தை குறைக்காது
"தமிழகவெள்ள பாதிப்புகாக அதிமுக ஆடம்பரைத்தை குறைக்காது - நாஞ்சில் சம்பத். அம்மா உங்களுக்கு ஆப்பு வைக்க இந்த ஒரு ஆள் போதும்." என்று ஜெயலலிதாவுக்கு வார்னிங் கொடுக்கிறது இந்த டிவிட்.












Click it and Unblock the Notifications