யாரோ தடி கொண்டு தலையால் தாக்குவது போல இருந்தது... நாஞ்சில் சம்பத்தின் 'ஷாக்' போஸ்ட்
மமதா பானர்ஜியின் தலைக்கு பாஜகவின் யோகோஷ்வர்சினி ரூ11 லட்சம் விலை வைத்த செய்திக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தலைக்கு பாஜகவின் யோகோஷ்வர்சினி ரூ11 லட்சம் விலை வைத்த செய்தி யாரோ தம்மை தடி கொண்டு தலையால் தாக்குவது போல இருந்தது என பதிவிட்டுள்ளார் அதிமுக(அம்மா) கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது:
காலை புலர்ந்து பத்திரிகையில் கண் விழித்தால் யாரோ தடி கொண்டு தலையால் தாக்குவது போல் , இடி வந்து இதயத்தில் விழுவதைப் போல் துடித்துப் போகிறேன். மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தாவின் தலையை எடுத்து வந்து என்னிடம் தந்தால் 11 லட்சம் வெகுமதி தருகிறேன் என்று பாரதிய ஜனதாவின் இளைஞரணி தலைவர் யோகோஷ்வர்சினி அறிவித்துள்ளார்.
திட்டமிட்ட மோதல்
ஏற்கனவே கேரள முதல்வர் பினராய் விஜயனின் தலைக்கு 2 கோடி ரூபாய் விலை வைத்தார்கள். பாரதீய ஜனதா இல்லாத மற்ற கட்சிகள் ஆளுகிற இப்படி ஒரு மோதல் போக்கை பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.
உச்சகட்ட ஆணவம்
இந்தியா முழுவதையும் காவி மயமாக்க துடிக்கும் வகுப்புவாத ஓநாய்களின் அறிவிப்பு இந்தியாவிற்கு மிகப்பெரிய அறைகூவல்களாகும். கார்பரேட் கம்பெனிகளுக்காக கடை விரித்துள்ள பாரதீய ஜனதாவின் ஆட்சி இந்தியாவுக்கு சாபக்கேடு.உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்களின் ஆணவம் உச்சந்தலைக்குச் சென்று விட்டது.
தலைவெட்டி தம்புரான்கள்
அதன் அடையாளம் தான் தலை வெட்டி தம்புரான் இப்படி திட்டமிட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி விடுவதற்கு படாதபாடு படுகிறார்கள். காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடைப்பெற்ற மாநிலங்களில் அன்றைக்கு காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியை பாரதீய ஜனதா இன்று வேறு வடிவில்செய்கிறது.
விழிபிதுங்கும் காங்கிரஸ்
இந்தியாவின் விடுதலையை தீர்மானித்த காங்கிரஸே இன்று விழி பிதுங்கி நிற்கும் பொழுது தலைவெட்டி தம்புரான் கதை நாளைக்கு என்னவாகும் என்பதை சரித்திரம் சொல்லும். வேற்றுமையில் ஒற்றுமை காண விரும்பாத இந்த காவிக் கும்பலை எல்லா முனையிலும் நிராகரிக்க மக்கள் முடிவெடுக்காவிட்டால் மக்களின் தலைக்கும் விலை வைப்பார்கள் , ஆகவே தலை பத்திரம். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளார்.