சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அதை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு தயாராக உள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக சென்னை, கடலூர், தூத்துக்குடியில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 421 பேர் உயிரிழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்தன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை எடுத்துள்ளது.
ஒவ்வொரு பகுதிக்கும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நிவாரண பணி குழுவில் போலீஸ் உயர் அதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் ஐ.ஜி. க்கு நிகரான போலீஸ் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ஐ.ஜி. டேவிட் ஆசீர்வாதம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஐ.ஜி.சாரங்கன் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் கூடுதல் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன், ஐ.ஜி.சந்தீப்ராய் ரதோர் தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று உஷார்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை தயார் நிலையில் நிறுத்த முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 5 படைப்பிரிவுகளை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.
அரக்கோணத்தில் இயங்கி வரும் தேசிய பேரிடர் மீட்புக்குழு முகாமில் இருந்து அவர்கள் வரவழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு படையிலும் 45 பேர் இருப்பார்கள். அந்த வகையில் முதலில் 225 பேர் வர உள்ளனர்.
வருகிற வெள்ளிக்கிழமை முதல் இவர்கள் சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களில் தயார் நிலையில் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க சிறு படகுகளுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் இருந்து ஒவ்வொரு படகு மூலம் சுமார் 10 பேர் வரை மீட்க முடியும். இந்த வார இறுதிக்கு பிறகு மழை நிலவரத்தை பார்த்து விட்டு கூடுதல் படைகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.