ஆந்திர என்கவுண்டர்: வீட்டுக்கு ஒரு அரசு வேலை... கொலையானோர் குடும்பத்தினர் எஸ்.டி.கமிஷனிடம் மனு
சென்னை: ஆந்திரா என்கவுண்டர் சம்பவத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தார், தேசிய பழங்குடியினர் நல துணை ஆணையரிடம் கோரிக்கை அளித்தனர்.

ஆந்திராவின் சித்தூர் வனப்பகுதியில், செம்மரம் வெட்டியதாக கூறி, தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டு பொசுக்கினர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய பழங்குடியினர் நல துணை ஆணையர் ரவிதாகூர், தமிழ்நாடு பழங்குடியினர் நல துணை ஆணையர் வேணுபிரசாத் ஆகியோர், ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனான சந்திப்பு இன்று, நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், மேல்குப்பசனாவூர் சின்னசாமி, ராஜேந்திரன், கோவிந்தசாமி, வெள்ளிமுத்து ஆகியோரின் உறவினர்களும், மேல்கனாவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் தந்தை ராமசாமி உள்ளிட்ட 10 குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர்.

அப்போது, எங்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 10 ஏக்கர் நிலமும், பிள்ளைகள் கல்லூரி வரை படிக்கும் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications