சசிகலா கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டது 'கதை'- கருணாநிதி
சென்னை: சசிகலா கணவர் நடராஜன் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதும் ஒரு தொடர் கதை என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில், "சசிகலா நடராஜன் கைது விவகாரத்திற்கு சொல்லப்படும் கதை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர், அதற்கு கருணாநிதி அளித்துள்ள பதிலிலும், அதை கதை என்று குறிப்பிட்டுள்ளார்.

அது ஒரு தொடர் கதை
அவர் கூறியுள்ள பதில் வருமாறு: கதைதான்! திடீர் திடீரென்று சசிகலா நடராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், சில நாட்களுக்கு பிறகு அவரை விடுவிப்பதும் இந்த ஆட்சியில் தொடர் கதையாக உள்ளது.

கைது செய்யப்பட்டவர் மனைவி முதல்வர் வீட்டில்
அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார்? எதனால் விடுவிக்கப் படுகிறார்? இப்படிப்பட்டவரின் மனைவி, முதலமைச்சர் வீட்டிலே, அவருடன் இருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்க வில்லையா? அவர் இவ்வாறு அடிக்கடி கைது செய்யப்படுவது, ஏதோ குடும்ப சண்டை போல தெரிகிறதே? அதற்கு அரசின் காவல் துறை உடந்தையா?

வேறு ஓட்டலில் தங்கியிருந்தாராம்
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இவருடைய வழக்கறிஞர், இன்னொரு வரை இவர் துப்பாக்கியால் மிரட்டியதாகச் சொல்லப்பட்ட நேரத்தில் வேறொரு குறிப்பிட்ட ஓட்டலில் தங்கியிருந்ததாகவும், ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள காமிராவில் அவர் இருப்பது பதிவாகியிருக்கிறது என்றும், அதற்கான ரசீது இது என்றும் காண்பித்துள்ளார்.

துப்பாக்கியே இல்லையாமே
லைசென்ஸ் பெற்ற தனது துப்பாக்கியை தேர்தல் நேரத்திலேயே போலீசாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், எனவே துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுவது தவறு என்றும், எனவே இது பொய் வழக்கு, ஜாமீனில் விடவேண்டுமென்று கோரியிருக்கிறார்.

முக்கிய வழக்காம்
ஆனால் காவல் துறையினர், இது முக்கியமான வழக்கு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென்று கூறிப் பெற்றிருக்கிறார்கள். இதில் உண்மை என்ன? என்னதான் நடக்குது இந்த நாட்டிலே? என பாடத்தான் வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications