ராஜபக்சேவுக்கு பாரதரத்னா.. நேரு, காமராஜரை கேவலப்படுத்தி வி்ட்டார் சாமி - பழ. நெடுமாறன்
தஞ்சாவூர்: ராஜபக்சேவுக்கு பாரதரத்னா தர வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் நேரு, காமராஜர் போன்ற தலைவர்களை கேவலப்படுத்தியுள்ளார் சுப்பிரமணியம் சாமி என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில், தமிழர் தேசிய முன்னணி மாநில தலைமை செயற்குழு விளக்க கூட்டம் நடந்தது. இதற்கு நெடுமாறன் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

புத்த துறவிக்கு தபால் தலை:
இலங்கையில் சிங்களர், தமிழர்கள் பிரச்சினைக்கு வித்திட்ட புத்த துறவி அருணாஹரி தர்மபாலாவுக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டதை கடுமையாக கண்டிக்கிறோம்.
மீனவரை சுட்டுக் கொன்ற கர்நாடக அதிகாரி:
காவிரி ஆற்றில் தமிழக எல்லைப் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர் பழனியை கர்நாடக வனத்துறை பிடித்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது. பழவேற்காடு ஏரியில் தமிழக எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கனை ஆந்திர மீனவர்கள் தாக்குகின்றனர், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்குகின்றனர். இவை அனைத்தையும் மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதை கண்டிக்கிறோம்.
சீன கிரிமினல்கள்:
இலங்கை சிறையில் உள்ள சீன கிரிமினல் குற்றவாளிகளை விடுதலை செய்து இலங்கையின் கட்டுமான பணிகளுக்கு பணி அமர்த்துகின்றனர். இது தமிழர்களை அச்சுறுத்துகிறது.
போர்க்குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் சாமி:
இலங்கையில் போர் குற்றவாளி என விசாரணையில் உள்ள ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என சுப்பிரமணியசாமி கூறியது பாரத ரத்னா விருது பெற்ற நேரு, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, காமராஜர் ஆகியோரை களங்கப்படுத்துவது மற்றும் பாரத ரத்னாவை களங்கப்படுத்துவதாக அமையும்.
தமிழ்நாடு தனி நாடாக உருவான ஆண்டு:
1956-ம் ஆண்டு தான் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளாகும். எனவே அன்றைய தினத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாடு உருவான நாளாக கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications