மூதாட்டி மரண துயருடன் நெடுவாசலில் 22-வது நாளாக தொடரும் போராட்டம்!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 22-வது நாளாக போராட்டம் தொடருகிறது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 22-வது நாளாக இன்றும் போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி உயிரிழந்த நிலையிலும் துயரையும் தாங்கிக் கொண்டு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பொதுமக்களின் போராட்டம் தொடருகிறது. இந்தப் போராட்டத்தைக் கைவிட அரசு தரப்பில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஒப்பாரி வைத்து நேற்று பெண்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த ஒப்பாரி போராட்டத்தில் பங்கேற்ற பொன்னம்மாள் என்ற மூதாட்டி திடீரென மயக்கமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துயரையும் தாங்கிக் கொண்டு போராட்டம் தொடருகிறது. மேலும் நெடுவாசலில் நேற்று குளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் திரைப்பட இயக்குநர் கவுதமன் பங்கேற்றார். அப்போது பேசிய பெண்கள், முடிந்த அளவு நாங்களும் குரல் எழுப்பிவிட்டோம். இன்னமும் மத்திய அரசின் காதில் எங்கள் கோரிக்கை விழவில்லை. கழுத்தை அறுத்துக் கொண்டு செத்தாலும் சாவோமே தவிர போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறினர்.
இன்றும் 22-வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் எழுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.