ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை அறவழி போராட்டம் தொடரும்: நெடுவாசல் போராட்டக் குழு
அமைதியான முறையில் போராட்டத்தை தொடரப் போவதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை அமைதியான வழியில் அறப்போராட்டம் தொடரும் என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்தப் பகுதியில் கடந்த 16ஆம் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் 18 வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் பிரதிநிதிகளுடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் போராட்டக் குழுவைச் சேர்ந்த செந்தில்தாஸ், ரமேஷ், அடைக்கலம், தட்சிணாமூர்த்தி, அழகர் உள்பட 50 பேர் கலந்துகொண்டனர். இதில், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஹைட்ரோ கார்பன் திட்ட காவிரி படுகை பிரிவு பொது மேலாளர் பவன்குமார் தலைமையிலான அதிகாரிகள், கிராமத்தினருக்கு திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.
திட்டத்தின் சாதக அம்சங்களைப் போராட்டக் குழுவினருக்கு விளக்கினர். மேலும், போராட்டக் குழுவினர் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் போராட்டக்குழுவினர் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவினர், ஓஎன்ஜிசி அதிகாரிகள் அளித்த விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை எனவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை சுமுகமான அமைதி வழிப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.