சென்னை புறப்பட்டது நெடுவாசல் போராட்டக்குழு.. முதல்வருடன் இன்று சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று சந்தித்து பேச உள்ளனர்.
புதுக்கோட்டை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதற்காக நெடுவாசல் போராட்டக் குழுவினர் சென்னை புறப்பட்டனர். 9 பேர் கொண்ட குழுவினர் சென்னை தலைமைசெயலகத்தில் இன்று முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளனர்.
இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் மக்கள் கடும் போராட்டத்தில் 13 நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயி அமைப்பினர், திரையுலகினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், சுற்றுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் போரட்டக்குழுவை சேர்ந்த ஒன்பது பேர் இன்று காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச உள்ளனர். இதனிடையே ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி, மற்றும் போராட்ட குழு உறுப்பினர் ஒன்பது பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்குழுவினர் சென்னை புறப்பட்டனர்.
முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டக்காரர்களிடம் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் சொன்ன எதையும் கிராம மக்கள் ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications