பெரிதும் எதிர்பார்த்த நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை: அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தேசிய தகுதிகாண தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது.

இதனிடையே கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் 18.34 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 65,000 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 23,000 பிடிஎஸ் இடங்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
பிறமொழிகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் பாரபட்சம் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார்.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கினர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்து கொள்ளலாம் என்றனர்.
இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வரும் 26-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த 2 நாள்களுக்கு முன்னர் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது இன்று நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications