இன்றைய நீட் தேர்வாளர்கள்.. அடுத்த வருடம் வாக்காளர்கள்.. யார் மீது பாயப் போகிறது கோபம்?
இந்த வருடம் நீட் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த வருடம் வாக்களிக்கும் தகுதி கிடைக்கும். தங்களது கோபத்தைக் காட்ட இது நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் நடைபெற்ற அவலங்களால் தமிழக இளம் சமூகம் கடும் கோபத்தில் குமுறியபடி உள்ளது.
மூக்குத்தியை கழற்றுவது, ரிப்பனை அவிழ்த்து விடுவது, உள்ளாடை தெரியும் அளவுக்கான வெளிர் ஆடைகளை அணிந்து வருமாறு மாணவிகளையும் வற்புறுத்தியது என தன் மானத்திற்கே சவால் விட்டுள்ளது நீட்.
இந்த கொடுமைகளோடு மற்றொரு பெரும் கொடுமையாக நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்திற்கு சென்ற தனது மகனுடன் உதவிக்கு சென்ற கிருஷ்ணசாமி, மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் இறந்தது தெரியாமல், கிருஷ்ணசாமி மகன் மகாலிங்கம் தேர்வு எழுதி திரும்பினார்.
ராஜஸ்தானுக்கு கொஞ்சம், கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் மிச்சம் என தமிழக மாணவ, மாணவிகளுக்கான தேர்வு மையங்களை எங்கெங்கோ நிர்ணயித்து பந்தாடியது சிபிஎஸ்இ. பக்கத்து நகரத்திற்கு போக வேண்டும் என்றாலே பதறும் கிராம மாணவர்களை, மொழி தெரியாத மாநிலங்களுக்கு விசிறியடித்தது சிபிஎஸ்இ.
கண்டுகொள்ளவில்லையே
இந்த குழறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து போதிய மையங்களை அமைத்து கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்த மாநில அரசோ, எங்கோ, யாருக்கோ, ஏதோ நடப்பதை போன்ற தோரணையை காட்டி வருகிறது. இதற்கெல்லாம் காரணம், நிர்வாக திறமையின்மையா, அல்லது 'மேலிட' நெருக்கடியா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை
கிருஷ்ணசாமியின் சடலம் சொந்த ஊரில் தகனம் செய்யப்படும் முன்பாக, அங்கே மக்கள் கூடி அஞ்சலி செலுத்தி வந்தபோது, மெரினாவில், ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட நினைவிடம் அமைக்கும் துவக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றதை மக்கள் பார்த்து விட்டு, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை உண்மையில் நடந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
தேர்வு மைய சர்ச்சை
நீட் தேர்வே வேண்டாம் என்று கடந்த ஆண்டு முதலே, தமிழக மக்கள் எழுப்பும், கூக்குரலை கிஞ்சித்தும் மதிக்கவில்லை மத்திய அரசு. தேர்வை வைத்ததோடு, தேர்வு மையங்களை தேடும் நிலைக்கும் கொண்டு வந்துவிட்டது இந்த ஆண்டு. மத்திய அரசின் தணியா கோபம்தான் தமிழக மாணவர்கள் மீதான இந்த அடக்குமுறை என்ற எண்ணம் பிஞ்சுகள் மனதில் வடுவாய் பதிந்துவிட்டது.
அடுத்த ஆண்டு தேர்தல்
இந்த கோபம் காட்டு தீ போல மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மனங்களில் சுழன்று கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வர உள்ளது. அதோடு சேர்த்து தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. அதேபோல, இந்த வருடம் நீட் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த வருடம் வாக்களிக்கும் தகுதி கிடைக்கும். அதாவது 18 வயதை தொடுகிறார்கள். நீட்டால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் தங்களது கோபத்தைக் காட்ட இது நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதேபோல இந்த மாணவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களின் குடும்பத்தாரும், இவர்களுடன் இணைந்தால் தேர்தலில் அது மிகப் பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தும்.
நீட் அவலத்துக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதலாக இது அமையலாம்.