நீட் எனும் பெருங் கொடுங்கரம் போராளி அனிதாவின் வாழ்க்கையையே பலி கொண்டுவிட்டதே.....
நீட் எனும் கொடூரம் அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை பலி கொண்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: நீட் எனும் பெருங் கொடுங்கரத்துக்கு எதிராக சமூக நீதி கிடைக்க போராடிய இளம் போராளி அனிதாவின் தற்கொலை தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அரியலூர் மாவட்ட குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா, இளம் வயதிலேயே தாயை பறிகொடுத்தவர்.
அனிதாவின் தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து குடும்பத்தைக் காப்பாற்றியவர். வறுமை வாழ்க்கையில் துரத்திய போதும் கல்வி தாகம் கொண்டவராக இருந்தார் அனிதா.

பத்தாம் வகுப்பில் 478
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்கள் பெற்றார் அனிதா. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.

ப்ளஸ் டூவில் 1176
இவ்வளவு வறுமையில் நன்றாக படித்த அனிதாவுக்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தனர். விடுதியும் கிடைத்தது. விடா முயற்சியுடன் வறுமையை எதிர்கொண்ட நிலையிலும் ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.

கட் ஆப் 196.5
மாநில பாடத் திட்டத்தின்படி அவருக்கு கட் ஆப் மதிப்பெண்கள் 196.5 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் நிச்சயம் அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருக்கும்.

நீட் தேர்வில் 80
ஆனால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படியான நீட் தேர்வை எழுதிய அனிதாவால் 80 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. இதனால் மருத்துவ படிப்பு கனவு கேள்விக்குள்ளானது.

போராட்ட களத்தில் அனிதா
இந்த நிலையில் அரியலூரில் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் தன்னெழுச்சியாக கலந்து கொண்டார் அனிதா. அப்போது திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கரை சந்தித்து தமது நிலைமையை வெளிப்படுத்தினார் அனிதா.

அனிதா பற்றி முதலில் வெளியிட்ட ஒன் இந்தியா
இதை முகநூலில் சிவசங்கர் வெளியிட நமது ஒன் இந்தியா தமிழ் முதன் முதலில் செய்தியாக வெளியிட்டது. இதையடுத்து நீட் எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அனிதாக்களைப் போன்றவர்கள் பதிவிட அழைப்பு விடுத்தனர். ஏராளமானோர் அந்த பக்கத்தில் தொலைந்து போன மருத்துவ படிப்பு கனவு குறித்து பதிவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் அனிதா
பின்னர் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் கல்வியாளர்கள் உதவியுடன் அனிதாவும் இணைந்து கொண்டார். ஆனாலும் நீட் தேர்வு வென்றது...
பறிபோனது அனிதாவின் வாழ்க்கை
இப்போது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போன விரக்தியால் அனிதா தம்முடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
"நீட்" கொடுங்கரம் விழுங்கிய அனிதாக்களின் எதிர்காலத்துக்கு என்ன பதில்? என நாம் அன்று பதிவிட்டோம்..
இன்று "நீட்" கொடுங்கரம் ஒட்டுமொத்தமாக அனிதாவின் வாழ்க்கையே பலி கொண்டுவிட்டதே...












Click it and Unblock the Notifications