உலகத் தமிழர்களை உலுக்கிய மாணவன் மகாலிங்கத்தின் 'அப்பா எங்கே'? #அப்பாஎங்கே
மாணவன் மகாலிங்கத்தின் 'அப்பா எங்கே' என்கிற கேள்வி உலகத் தமிழர்களை உலுக்கி வருகிறது.
Recommended Video
சென்னை: நீட் காவு கொண்ட கிருஷ்ணசாமியின் மரணத்தை அறியாமல் போலீஸ் வேனில் இருந்தபடியே 'அப்பா எங்கே' என மாணவன் மகாலிங்கம் எழுப்பிய கேள்வி உலகத் தமிழர்களை உலுக்கி வருகிறது.
நீட்டை எதிர்த்து கடந்த ஆண்டு அரியலூர் அனிதா தூக்கிட்டு மாண்டு போனார். உலகத் தமிழர்களை பெருந்துயரத்திலும் பேரதிர்ச்சியிலும் உறைய வைத்தது அனிதாவின் மரணம்.
அனிதாவுக்கு நீதி கேட்டு பூமிப் பந்தில் தமிழர் வாழும் நிலமெல்லாம் குமுறலுடன் போராடின. இப்போது நீட்டை ஏற்றுக் கொண்ட பாவத்துக்கு இன்னொரு தமிழரான கிருஷ்ணசாமியை பறிகொடுத்திருக்கிறது தமிழ் சமூகம்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் மகன் மகாலிங்கம் தேர்வெழுதிக் கொண்டிருக்க.. அறையில் மன உளைச்சலுடன் போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணசாமியை மாரடைப்பு தாக்கி உயிரை காவு வாங்கியது.
இந்த துயரம் தெரியாமலேயே தேர்வை எழுதி முடித்துவிட்ட மகாலிங்கம் போலீஸ் படை சூழ வண்டிகளில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்ன நடக்கிறது என புரியாமல் விழிபிதுங்கி அப்பா எங்கே என கண்களை விரியதேடவிட்டு உருக்கமாக மகாலிங்கம் கேள்வி கேட்டது மனிதர்களாகப் பிறந்த அனைவரையும் நொறுங்கிப் போக வைத்திருக்கிறது.
மகாலிங்கத்தின் அப்பா எங்கே என்கிற காட்சி ஒவ்வொருவரது நெஞ்சையும் அடைத்துப் போக வைக்கிறது. துடி துடிக்க வைக்கும் அப்பா எங்கே? என்கிற கேள்வி துவண்டு போகச் செய்கிறது.
சமூக வலைதளங்களில் உலகத் தமிழர்கள் 'அப்பா எங்கே?' என கேள்வி எழுப்பி உள்ளக் குமுறலையும் ஆற்றாமையையும் கொட்டித் தீர்க்கின்றனர். திரும்பிய திசையெங்கும் மகாலிங்கத்தின் 'அப்பா எங்கே' என்கிற காட்சி மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து போய் வலிக்கச் செய்கிறது.
பலிபீடமாய் தமிழ்நாடும் பலியாடுகளாய் தமிழர்களும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்... இன்னொருபக்கம் பல நூறு பேரை பலி கொண்ட புழுதிப் புயல் வீசிக் கொண்டிருக்கிற ராஜஸ்தான் பாலைவனத்தில் இருந்தும் சீனத்து எல்லையான சிக்கிமில் இருந்தும் நம் பிள்ளைகள் பத்திரமாய் வீடு வந்து சேர வேண்டும் என்கிற தவிப்பும் ஒவ்வொரு உலகத் தமிழரிடமும் உணர முடிகிறது.