கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி
கரும்பலகையில் பாடம் கற்பிப்பதை விட்டு விட்டு கணினி வழியில் நெல்லை அரசு பள்ளியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை: கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின் சார்பில் பாலமடை ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, ராதாபுரம் ஒன்றியம் சிலந்திகுளம் நடுநிலைப்பள்ளிகளிலும் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.

பாலமடை ஊராட்சி ஓன்றிய பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சியர் சந்தீப் தந்தூரி இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமச்சீர் பாடத்திட்டம் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்று கொடுக்கப்படுகிறது. இதற்கான மின்சாரம் சோலார் மூலம் கிடைக்கிறது. பாடங்கள் படங்கள் மூலம் நடத்தப்படுவதால் மனதில் எளிதாக பதியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி சில பள்ளிகளில் இருந்தாலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
அதுவும் சோலார் வகுப்பறை இந்தப் பள்ளியில்தான் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த நேரமும் கல்வி கற்பிக்க முடியும். மாணவர்கள் விரும்பிய பாடங்களை மின்சாரம் உபயோகிக்காமல் படிக்கலாம். இதனால் அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications