இந்து மக்கள் கட்சியினரால் மதம் மாறிய கிறிஸ்தவர்... "சாமி" வந்து ஆடியதால் பரபரப்பு!
நெல்லை: நெல்லை அருகே கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் கிறிஸ்தவர் ஒருவரை மதம் மாற்றினர். மதம் மாறிய அந்நபர், சிறிது நேரத்திலேயே சாமி வந்ததாக ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நடந்து வந்த கிறிஸ்தவ மதத்தினரை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி, தற்போது தமிழகத்திற்கும் வந்து விட்டது. கடந்த வாரம் சென்னை திருவல்லிக்கேணி கோவிலில் 108 பேரை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்துமக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். ஆனபோதும், பத்து பேர் மதமாற்றம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், சென்னையில் பரபரப்பாக மதமாற்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில், நெல்லையிலும் ஓசைப்படாமல் அதே நிகழ்ச்சியை இந்து மக்கள் கட்சியினர் நடத்தியுள்ளனர்.
நெல்லையை அடுத்த மானூர் பகுதியில் இந்துமக்கள் கட்சியின் மாநில கொள்கை விளக்க செயலாளர் ஜெகதீசன் தலைமையில், அடிப்படை வசதிகள் செய்துதர கேட்டும், அங்குள்ள சிவன் கோவில் தெப்பக்குளத்தை சரிசெய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள அம்பலவாண சாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மேல இலந்தகுளம் தேவர்குளம் ரோட்டை சேர்ந்த கோவில்பிச்சை (50) என்பவரை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். கோவிலுக்குள் சென்றதும் கோவில்பிச்சையை இந்துவாக மதம் மாற்றி பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மதம் மாறிய கோவில்பிச்சைக்கு சிவன் என பெயர் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது. இந்த மதமாற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி, மேல இலந்தகுளம் ஒன்றிய செயலாளர் சண்முகம், மானூர் ஒன்றிய செயலாளர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மானூர் போலீசார் அங்கு திரண்டு வந்தனர்.
மதமாற்ற நிகழ்ச்சி முடிந்து நிர்வாகிகள் அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர். பின்னர் கோவில்பிச்சையை மதம் மாற்றிய விவரத்தை மற்ற தொண்டர்களிடம் அறிவித்தனர்.
இந்த நேரத்தில் மதம் மாறிய கோவில்பிச்சை திடீரென்று தனக்கு சுடலைமாடசாமி அருள் வந்ததாக கூறி சாமி ஆடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலில் நடந்த இந்த மதமாற்ற நிகழ்ச்சி தொடர்பாக மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications