'அக்ரி'க்கு நெருக்கடி- நெல்லை வேளாண்துறை அதிகாரி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!!
சென்னை: நெல்லையில் வேளாண் பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி திருமால்நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இவர் அண்மையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண்துறை ஓட்டுநர் காலி இடங்களுக்கு நேர்மையான முறையில் நியமனங்களை மேற்கொண்டிருந்தார் முத்துக்குமாரசாமி.

ஆனால் வேளாண்துறை அமைச்சரின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட சிலர், தாங்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே பணியிடம் வழங்க வேண்டும் அல்லது நீங்கள் பணிவழங்கும் நபர்களிடம் இருந்து பணம்பெற்று தாருங்கள் என்று முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதில் மனமுடைந்துதான் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேளாண்மைத்துறை பணியாளர்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி வகித்து வந்த அண்ணா தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பதவி 2 நாட்களுக்கு முன்னர் பறிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனிடையே முத்துகுமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கட்சி, அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications