பழிக்குபழியாய் தொடரும் கொலைகள் – பதட்டத்தில் நெல்லை!
நெல்லை: நெல்லையில் தொடரும் பழிக்கு பழி வாங்கும் கொலைச் சம்பவங்களால் நெல்லை மக்கள் பதட்டத்திலேயே வாழும் நிலையில் உள்ளனர்.
நெல்லை கோபால சமுத்திரத்தில் தர்மராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவத்திற்கு பழிவாங்கும் சம்பவமாக கார்த்திக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மேலப்பாளையம் வழியாக கோபாலசமுத்திரம் கிராமத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பஸ்சில் கோபாலசமுத்திரம் அருகே உள்ள கொத்தன்குளம் இந்திரா காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மந்திரம் , மற்றும் அதே ஊரை சேர்ந்த சக்திவேல் உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். தருவையை அடுத்த சித்தா ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தம் அருகில் பஸ் சென்ற போது ஒரு கும்பல் பஸ்சை திடீரென்று வழிமறித்தது.
பயணிகள் தான் ஏறப்போகிறார்கள் என நினைத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே அந்த கும்பலில் இருந்து 4 பேர் பஸ்சுக்குள் ஏறினர். பஸ்சில் இருந்த மந்திரத்தையும், சக்திவேலையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர். அருகில் இருந்த 2 பேர் இதை தடுக்க முயன்றனர்.
அவர்களையும் கும்பல் வெட்டியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மந்திரம் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயம் அடைந்த சக்திவேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சினிமாவில் வருவது போன்று நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள், பெண்கள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பஸ்சை வழிமறித்து கொலை நடந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் திடீர் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் எதிரொலியாக கோபாலசமுத்திரம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. அந்த வழியே பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications