விபத்து அதிகரிப்பு எதிரொலி.. நெல்லையில் இரு சக்கர ஆம்புலன்ஸ் அறிமுகம்
நெல்லையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இரு சக்கர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் அவசர உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவ இரு சக்கர ஆம்புலன்ஸ் வசதி நெல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு சக்கர ஆம்புலன்ஸ் ஏற்கனவே சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பாட்டில் உள்ளது. நெல்லை மாநகர பகுதிக்கும் இரு சக்கர ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் மற்றும் குற்றால சீசன் காலத்தில் இந்த ஆம்புலன்ஸ் சோதனை ஓட்டத்திற்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆம்புலன்ஸ் மாலை முதல் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இதை கோபாலகிருஷ்ணன் என்ற மருத்துவ நிபுணர் ஒட்டி வருகிறார். வண்ணார்பேட்டையில் குறைந்தபட்சம் 5 கிமீ தூரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தேவைப்படும் இடங்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் விரைந்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்துகள் அடங்கிய பெட்டி இதில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆம்புலன்ஸ்சில் ஸ்பீக்கர் வசதி, சைரன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான 108 ஆம்புலன்ஸ்சுக்கு அவசரக் காலத்தில் தகவல் கொடுத்தால் அந்தப் பகுதிக்கு இந்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்சை முதலில் அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications