தென் மேற்கு பருவமழை தீவிரம்.. நீர்மட்டம் உயர்வதால் சுற்றுலா தலமான நெல்லை ராமநதி அணை
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் ராமநதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணையின் முழு கொள்ளளவு 84 அடியாகும். இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையை நம்பி ஆண்டுக்கு இரண்டு போகம் நெல் பயிரிடப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டதால் அணையில் போதிய தண்ணீர் நிரம்பவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அவ்வப்போது பெய்து வருவதால் அணை நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.
இதையடுத்து கடந்த இரண்டாம் தேதி 'கார்' பருவ சாகுபடிக்காக அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதனால் நெல் நடவுக்காக நாற்றங்கால் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது ராமநதியின் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வருகிறது. கார்பருவ சாகுபடியை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் கடையநல்லூர் மற்றும் நெல்லை மாவட்ட சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து சாப்பிட்டு பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர்.