பருவமழை தீவிரம்: அணைகளின் நீர்மட்டம் கிடு..கிடு... உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அப்பகுதியிலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் முக்கியமான 11 அணைகள் உள்ளன. இதில் பாபநாசம் அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான குடிநீர் தேவைகள் பூர்த்தியாகி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் குறிப்பிட்ட தேதியில் பெய்த போதிலும் தொடர்ச்சியாக சரியாக பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் போதிய அளவு நிரம்பவில்லை.
நீர் வரத்து அதிகரிப்பு...
ஆனால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சீசன் மழை தீவிரம் அடைந்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையில் 60.65 அடியாக இருந்த நீர்மட்டம் 62.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2219 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையில் 74.47 அடியாக இருந்த நீர்மட்டம் தறபோது 77.59 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை...
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடனாநதி அணையில் 61.50 அடியாக இருந்த நீர்மட்டம் ஓரே நாளில் 63.50 அடியாக உயர்ந்து விட்டது. அணைக்கு வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைப்பகுதியில் 3 மிமீ மழை பதிவாகியுள்ளது.
குண்டாறு அணை...
குண்டாறு அணை ஏற்கனவே அதன் முழு அளவான 36.10 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 91 அடியிலிருந்து 94 அடியாக உயர்ந்துள்ளது.
மகிழ்ச்சி...
அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.