நெல்லை, தூத்துக்குடி புதிய மேயர்களாக புவனேஸ்வரி, அந்தோணி கிரேஸ் பதவி ஏற்பு
தமிழகத்தல் காலியாக இருந்த நெல்லை, தூத்துக்குடி, கோவை மேயர் பதவி உள்பட பல பதவிகளுக்கு கடந்த வாரம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்தது. அதில் நெல்லை மேயராக புவனேஸ்வரியும், தூத்துக்குடி மேயராக அந்தோணி கிரேஸியும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற புவனேஸ்வரியும், அந்தோணி கிரேசும் புதிய மேயராக நேற்று பொறுப்பேற்று கொண்டனர். இவர்களுக்கு தங்க சங்கிலி, செங்கோல் வழங்கப்பட்டது. நெல்லை மேயர் புவனேஸ்வரிக்கு கமிஷனர் லட்சுமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.
இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன், எம்பிக்கள் முத்துகருப்பன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இது போல் தூத்துக்குடி மேயராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி கிரேஸி பதவியேற்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. அமைச்சர் சணமுகநாதன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் மதுமதி மேயருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவரை தொடர்ந்து 37வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் மாரிமுத்துவுக்கும் அவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து கமிஷனர் மதுமதி மேயரை அழைத்து கொண்டு மேயருக்கு உரிய அங்கி, செங்கோல் ஆகியவற்றை வழங்கி அணிவித்து மேயரின் இருக்கைக்கு அழைத்து வந்து அமர வைத்தார்.
பின்னர் மேயர் அந்தோணி கிரேஸ் ஏற்புரை வழங்கினார். இதில் எம்பிக்கள் சசிகலா புஷ்பா, நட்டர்ஜி, எம்எல்ஏக்கள் செல்லபாண்டியன், கடம்பூர் ராஜூ, துணை மேயர் சேவியர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.