படிப்பை முடித்தும் பட்டத்தை வாங்க முடியாமல் காத்திருக்கும் மாணவர்கள்.. "வி.சி" இல்லாததால்!
நெல்லை: நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் துணை வேந்தர் பதவி நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் அங்கு பட்டமளிப்பு விழா நடக்காமல் பட்டதாரிகள் தவித்து வருகின்றனர்.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பல்கலை கழகத்தின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 65 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
தொலைதூர கல்வியில் 24 வகையான படிப்புகளும், 32 வகையான முதுநிலை படிப்புகளும், 5 சான்றிதழ் படிப்பு என மொத்தம் 61 வகையான படிப்புகள் உள்ளன. இந்த பல்கலை கழகத்தில் துணை வேந்தராக இருந்த குமரகுரு கடந்த ஜூலையில் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதிய துணை வேந்தரை தேடும் பணியில் பல்கலைக் கழக பேராசிரியர் கண்ணன் தலைமையில் பேராசிரியர் அகமது கான், நாகராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு சார்பில் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எனினும் இதுவரை துணை வேந்தர் பதவி நி்ரப்பப்படவில்லை. கடந்த 6 மாதமாக துணை வேந்தர் பதவி காலியாக இருப்பதால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கின்றன.
நெல்லை பல்கலை கழகத்தில் பயின்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்ட சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் துணை வேந்தர் இல்லாததால் பட்டங்களில் கையெழுத்து போட முடியாமல் பல்கலை நிர்வாகம் திணறி வருகிறது. அதேபோல தட்கல் முறையில் பட்டங்களைக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications