மங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி
திருநெல்வேலி: செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்கு பாராட்டு குவிகிறது.
இந்திய விண்வெளி துறையின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் நேற்று முன்தினம் நனவாகியது. பிஎஸ்எல்வி சி 25 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

டிசம்பர் 1ந் தேதி அது தனது செவ்வாய் கிரக பயணத்தை தொடங்க இருக்கிறது. 300 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையை அது அடையும். இந்த திட்டம் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவி்ன் புகழ் அதிகரித்துள்ளது.
இந்த வியத்தகு சாதனை படைத்த மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் சுப்பையா அருணன். இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கோதைசேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.
அருணன் ஆரம்ப கல்வியை திருக்குறுங்குடி அரசு பள்ளியிலும், உயர் கல்வியை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியிலும் படித்தவர். கோவையில் பி.இ மெக்கானி்க்கல் இன்ஜினியரிங்கில் ஹானர் பட்டம் பெற்றார்.
இஸ்ரோ மையத்தில் 1984ம் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்று பெங்களூரு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். மங்கள்யாண் விண்கலத்தை உருவாக்கியது முதல் அதை வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் அருணன் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்துள்ளார் என அவரது இளைய சகோதரர் தெரிவித்துள்ளார்.
அருணனின் சாதனையை பாராட்டி வள்ளியூர் பகுதியில் ஃபேஸ்புக் நண்பர்கள் சார்பில் அவருக்கு பாராட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அருணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரால் நெல்லை மண்ணுக்கு பெருமை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications