நெல்லித்தோப்பு முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் வீட்டில் மீண்டும் ரெய்டு
நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரி அதிகாரிகள் அதரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி: நெல்லித் தோப்பு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜான் குமார் வீட்டில் இன்று வருமானவரித் துறையினர் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் அம்மாநில முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், நாராயணசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அடுத்த 6 மாதத்திற்குள் அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் ஜான்குமார் அவருடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து சவுரி படையாட்சி வீதியில் வசித்து வரும் இவருடைய வீட்டில் செப்டம்பர் 17ம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஜான் குமார் வீட்டில் இருந்து 1.25 கோடி கைபற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று இரண்டாவது முறையாக மீண்டும் வருமானவரித் துறையினர் ஜான்குமார் வீட்டில் அதரடி சோதனையில் இறங்கியுள்ளார். அவரது வீட்டின் அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக ஜான்குமார் ராஜினாமா செய்தபோது, அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கடுமையாக ஜான் குமார் மறுத்துள்ளார்.