ஜெ. மரணத்தில் மர்மம்.. வெள்ளை அறிக்கை தேவையில்லை என்ற திருநாவுக்கரசருக்கு நறுக்கென்று ஒரு கேள்வி!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெள்ளையறிக்கை தேவையில்லை என கூறிய திருநாவுக்கரசரை கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டாம் என கூறிய காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் திடீர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை புகழ் பெற்றது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் என அனைவருமா பொய் சொல்கிறார்கள்? அனைவரும் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை.
வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா? அவரின் மரணம் பற்றிய வதந்திகள் தேவையில்லாதவை என கூறினார்.
காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுகவின் பொருளாளரான ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோர், ஜெயலலிதா உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சிகிச்சையிலுள்ள மர்மத்தை களைய வெள்ளை அறிக்கை கேட்ட நிலையில், திருநாவுக்கரசர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அதிலும், மாநிலத்தின் முதல்வர் சாவில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கேட்பதை தவறு சொல்ல முடியாது. மர்மம் இல்லை எனும்போது அதை வெளிப்படையாக தெரிவிப்பதில் ஆளும் கட்சிக்கும் கஷ்டம் இருக்காது. ஆனால் அதை வேண்டாம் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை பார்த்துவிட்டு ஒரு நெட்டிசன் டிவிட்டரில் அடித்துள்ள கமெண்ட் இது: "ராஜிவ் காந்தி வந்துருவார்னா மூணு பேர உள்ள வெச்சிருக்கீங்க?!". ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ள பேரறிவாளன் உள்ளிட்டோர் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். அவர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு வழங்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.
திருநாவுக்கரசரை பாமக நிறுவனர் ராமதாஸும் டிவிட்டரில் விமர்சித்துள்ளார். சசிகலாவுக்குத்தான் எத்தனை செய்தி தொடர்பாளர்கள் என அவர் கிண்டல் செய்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா?: திருநாவுக்கரசர்- சசிகலாவுக்குத் தான் எத்தனை செய்தித் தொடர்பாளர்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) December 16, 2016