நாட்டைக் காப்பாத்தறது இருக்கட்டும்!' - தீபாவைக் கலாய்த்த நெட்டிசன்கள்
தமிழகத்தைக் காப்பாற்றுவோம் என புதிய வாட்ஸ் அப் குரூப்பை தீபா தொடங்கியுள்ளார்.
சென்னை: தமிழகத்தைக் காப்பாற்றுவோம் என்கிற தீபாவின் வாட்ஸ் அப் குரூப்பை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் இடமாக இருந்த தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீடு, இப்போது மயான அமைதியில் இருக்கிறது. இருப்பினும், ' தமிழ்நாட்டுக்குத் தலைமை தாங்க வாங்க' என தினமும் மூன்று பேராவது அவர் வீட்டு முன்கூடி குரல் எழுப்புகிறார்கள். இந்தக் காட்சிகளை வெகுவாக ரசிக்கிறார் தீபா.
அவருடைய ஃபேஸ்புக் பக்கமும் 'அ.இ.அ.தி.மு.க ஜெ.தீபா விங்க்' என்ற புது மொழியோடு இயங்குகிறது. ' அடுத்த தமிழக முதல்வர் நான்தான்' என நம்பிக்கையோடு பேட்டி கொடுத்து வருகிறார் தீபா.
மாதவன் இப்போது அவருடன் இருக்கிறாரா? தீபக்குடனான சொத்து வில்லங்கம் என்னவானது? ராஜாவுடனான நட்பு நீடிக்கிறதா என்பதெல்லாம் கார்டன் ரகசியங்களைப் போலவே, அமுங்கியிருக்கிறது. ' என்றாவது தெருவில் சண்டை நடக்கும்போது இவற்றை அறிந்து கொள்ளலாம்' என்ற நம்பிக்கையில் அவரது வீட்டை வலம் வருகிறார்கள் ஒரு சில தொண்டர்கள்.
இந்நிலையில், சேவ் தமிழ்நாடு(SAVE TAMILNADU) என்ற பெயரில் புதிய வாட்ஸ்அப் குரூப் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார் தீபா. 'இந்தக் குரூப்பில் இணைந்து கொள்ளலாம்' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
'ஜெ.தீபா அணி தமிழ்நாடு' என்ற பெயரில் இந்தக் குரூப் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து தீபா பக்கத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், ' முதலில் ஜெயலலிதா சொத்துக்களை சசிகலா அண்ட் கோவிடம் இருந்து பாதுகாக்கும் வேலையைத் தொடங்குங்கள். அதன்பிறகு மக்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் போயஸ் கார்டனில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, தமிழ்நாட்டைக் காப்பாற்ற வாருங்கள். உங்களை குறைத்து மதிப்பிடவோ ஊக்கத்தைக் குறைப்பதற்காகவே இதை நான் சொல்லவில்லை. அரசியல்வாதிகளின் கடந்தகால செயல்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.