கருப்பு நூலை கழட்டிய ஆபீசருங்க... 'அதை' ஏன் கழட்டச் சொல்லலை? நெட்டிசன்ஸ் கேள்வி!
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கையில் கட்டியிருந்த கருப்பு கயிறு கழற்றப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.
சென்னை: நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் கையில் கட்டியிருந்த கருப்பு கயிற்றை கழற்றச் சொல்லி அட்டூழியம் செய்த நீட் தேர்வு அலுவலர்களின் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
கயிறு என்று வந்து விட்டால் எல்லாமே ஒன்றுதானே. கருப்பு நூலை எடுக்கச் சொன்னவர்கள், அதேபோல மற்ற நூல்களுக்கும் அல்லவா தடை விதித்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சூடான விவாதம் கிளம்பியுள்ளது.
நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்துவிட்டது டெல்லி. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுக்கு சவக்குழி தோண்டிவிட்டார்கள்.
கதறி அழவைத்த கொடுமை
இந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. மாணவர்களையும் அழைத்துச் சென்ற பெற்றோரையும் பாதுகாப்பு கெடுபிடியின் பெயரால் கதறி அழ வைத்துவிட்டது சிபிஎஸ்இ வாரியம்.
உள்ளாடைகளையும் கூட..
மாணவிகளின் உள்ளாடைகளையும் கூட கழற்ற சொன்ன படு பயங்கரமெல்லாம் அரங்கேறியுள்ளது. துப்பட்டாவை கழற்றி வீசியிருக்கிறது சிபிஎஸ்இ கும்பல்.
கொடூரம் அரங்கேற்றம்
மாணவர்களின் முழுக்கை சட்டைகள் அறுக்கப்பட்டு அரைக் கைகளாக்கப்பட்ட கொடூரத்தையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். அத்துடன் மாணவர்கள் கையில் கட்டியிருந்த கருப்பு கயிறையும் அறுத்தெறிந்திருக்கிறார்கள்.
அதை ஏன் கழட்டலை?
கறுப்புக் கயிறை கழற்றச் சொன்னவர்கள் சிலர் "உள்ளே" அணிந்துள்ள நூலை மட்டும் அனுமதித்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. இருவருமே ஒரே மதத்தவர்தான். இருவரும் நம்பிக்கையின் பேரில்தான் இதை அணிகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருவருக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது ஏன். இதில் நியாயம் இல்லையே என்று விவாதம் கிளம்பியுள்ளது.