ம.தி.மு.க, இடதுசாரிகள், வி.சி. இணைந்து தேர்தல் கூட்டணி- நாளை மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: வைகோ
காஞ்சிபுரம்: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வுக்கு எதிராக 4 கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் திருவாரூரில் வெளியிடப்படும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 'மறுமலர்ச்சி வாகன பிரசார பயணத்தை' காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து இன்று தொடங்குகிறார். இதற்காக இன்று காலை காஞ்சிபுரம் வந்த அவர் அண்ணா இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் இந்த பயணத்தை தொடங்குவதற்கு காரணம் 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் 3 ஆம் தேதி என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டேன். அதே போல் தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. என்று தனிக்கட்சி தொடங்கிய போது அண்ணாவை மறக்காமல் அவரது பெயரை தனது கட்சிக்கு வைத்தார்.
ஆனால் இன்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் கட்சியாக மாறிவிட்டது. இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நல கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த மக்கள் நல இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றப்படும். ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை ஆகிய 4 கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணி அமைக்க உள்ளது. நாளை மறுநாள் திருவாரூரில் இதுபற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.
தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக இந்த கூட்டணி அமையும். தமிழ்நாட்டில் உள்ள 100 சதவீத வாக்காளர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே கட்சி சார்ந்தவர்களாக உள்ளனர்.
65 சதவீதம் மக்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள். அவர்களை நம்பி இந்த அரசியல் கூட்டணியை அமைக்க உள்ளோம்.
இந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் ஆவார்கள் என்று கேட்கிறீர்கள். வெற்றிக்கு பிறகு அது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.