அதிமுகவில் திடீர் பரபரப்பு- உதயமாகிறது புதிய கோஷ்டி! 28 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை!
அதிமுகவில் 28 எம்.எல்.ஏக்களைக் கொண்ட புதிய கோஷ்டி ஒன்று உருவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டன. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்குவதில் இரு கோஷ்டிகளும் மும்முரமாக இருக்கின்றன.

அதே நேரத்தில் தினகரன் கோஷ்டியின் சில எம்.எல்.ஏக்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதில் குறியாக இருந்து வருகின்றனர். அதுவும் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடுகள் இப்பேச்சுவார்த்தையை உடைப்பதில் படுதீவிரமாக இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் அதிமுகவின் 28 எம்.எல்.ஏக்கள் இணைந்து புதிய கோஷ்டியாக உருவெடுத்துள்ளனர். இந்த 28 எம்.எல்.ஏக்களும் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதில் அதிமுகவின் இரு கோஷ்டிகள் இணையும் நிலையில் தங்களது அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாம். அப்படி தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் ஆட்சி நீடிக்க முடியாத அளவுக்கு குடைச்சலை கொடுப்பது எனவும் தீர்மானித்துள்ளனராம்.
கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக இணைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்கிற நிலையில் புதிய கோஷ்டி புறப்பட்டிருப்பது ஓபிஎஸ், எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுகவில் இன்னும் எத்தனை எத்தனை கோஷ்டி வருமோ? எத்தனை பரபரப்புகள் வருமோ? என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications