தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களாக மோதிலால் வோரா மற்றும் ராஜாஜி பேரன் நியமனம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய அறங்காவலர்களை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் மோதிலால் வோராவை நியமித்துள்ளார்.
மேலும், அப்பதவிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்திய அரசின் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவரும், பிரச்சார் பாரதி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், மூத்த அறிஞர் ராஜாஜியின் பேரனுமான சி.ஆர்.கேசவன் ஆகியோரையும் நியமித்திருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தேனாம்பேட்டையில் 180 கிரவுண்ட் நிலம் கட்டிடம், கடைகள், 20 கிரவுண்ட்டில் காமராஜர் அரங்கம், 20 கிரவுண்டில் சத்தியமூர்த்தி பவன் ஆகியவை உள்ளன. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துக்களை இவர்கள் பராமரிப்பார்கள்.
இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை அறங்காவலர்களாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இப்போது முதல் முறையாக அகில இந்திய காங்கிரஸ் பொருளாளரும் ஒரு அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.