என்னது 'காவிக்கண்ணாடியா?' புதுசா இருக்கு... சமூகவலைதளங்களில் கலக்கும் வீடியோ!
இளைஞர்களின் கற்பனைக்கும், நிதர்சன ஒப்பீடுகளுக்கும் வலு சேர்ப்பவை சமூக வலைதளங்கள். நடப்பு அரசியலை அழகாக சொல்லும் இந்த காவிக்கண்ணாடி வீடியோ டுவிட்டர், வாட்ஸ் அப்பில் கலக்குகின்றன.
சென்னை : இளைஞர்களின் கற்பனைக்கும், நிதர்சன ஒப்பீடுகளுக்கும் வலு சேர்ப்பவை சமூக வலைதளங்கள். நடப்பு அரசியலை அழகாக சொல்லும் இந்த காவிக்கண்ணாடி வீடியோ டுவிட்டர், வாட்ஸ் அப்பில் கலக்குகின்றன. இளைஞர் ஒருவருக்கு கிடைக்கும் காவிக்கண்ணாடி காட்டும் அற்புதமான காட்சி ஒப்பீடு தான் இந்த வீடியோவில் ஹைலைட்டான விஷயம்.
நாட்டில் பாஜக சிறப்பான ஆட்சியை செய்து வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் தாமரை நாட்டின் பல பகுதிகளிலும் மலர்ந்துள்ளதாகவும் பாஜகவின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஆனால் சாமானிய மக்களுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகள் கிடைத்திருக்கிறதா என்றால் அதற்கு விடையில்லை.
ஒருவேளை நாட்டை பாஜக எப்படி மாற்ற நினைக்கிறதோ அதை இந்த கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் தான் தெரியுமோ. காவிக்கண்ணாடி என்ற ஒரு வீடியோ டுவிட்டரில் கலக்கலாக வலம் வருகிறது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் நிதர்சன நிலை ஒப்பீடு அசத்தலாக இருக்கிறது.
இளைஞருக்கு பார்சல் வரும் கண்ணாடி
அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் இது தான். இளைஞர் ஒருவரின் வீட்டு வாசலுக்கே ஒரு பார்சல் வருகிறது. அதில் ஒரு காவி நிறக்கண்ணாடி இருக்கிறது, அதன் மீது புதிய பார்வை என்று போட்டிருக்கிறது. இது என்ன கண்ணாடி என்று புரியாமல் போட்டு பார்த்தவருக்கு ஆச்சரியம்.
எங்கும் பாஜகமயம்
சுவரில் மாட்டப்பட்டிருந்த சேகுவேரா படம் பிரதமர் மோடியின் படமாக தெரிகிறது. மேஜையின் மீதிருந்த புத்தகம் இந்துத்துவ புத்தகமாகவும் கடைசியில் கண்ணாடியில் தன்னையே பார்க்கும் மாடர்ன் இளைஞருக்கு அவருடையே தோற்றத்திலேயே மாற்றம் தெரிகிறது.
ஏடிஎம் வாசலில்
சரி வீட்டிற்குள் தான் இப்படி என்று வெளியே போய் பார்த்தால், காவிக் கண்ணாடி வழியே பார்த்தால் சாலைகள் அழகாக இருக்கின்றன, கண்ணாடியை கழட்டிவிட்டு பார்த்தால் குப்பையும், போக்குவரத்து நெரிசலுமாக இருக்கிறது. ஏடிஎம் வாசலில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் மக்களை காவிக்கண்ணாடி வழியே பார்த்தால் சல்யூட் செய்து கொண்டு அமைதியாக வரிசையில் நிற்கின்றனர்.
|
கவனத்தை ஈர்த்த டுவீட்
டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீடியோ பாதியுடன் முடிவதால் முழு வீடியோ கிடைக்குமா என்று நச்சரிக்கின்றனர் சக வலைபதிவர்கள்.