திருமணமாகி 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை – காரணம் வரதட்சிணை!
தேனி: தேனி, பெரியகுளத்தில் திருமணமான 4 நாட்களில் புதுமணப்பெண் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவைச் சேர்ந்தவர் ரோஸ் என்ற அஸ்னியா பானு. இவருக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் யாசர் அராபத், அவருடைய தாயார், சகோதரர், சகோதரி ஆகிய நான்கு பேரும் ரோஸை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாகத் தெரிகின்றது. இந்தப்பிரச்னையில் வியாழக்கிழமை மாலை அஸ்னியாபானுவை அவரது தாய் வீட்டுக்கு யாசர் அராபத் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த ரோஸ் என்ற அஸ்னியாபானு வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாய் அமினா பேகம் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகிய புதுமணப்பெண் என்பதால் இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ஜானகியும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.