திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி: திருமணமான 11 நாட்களிலேயே புதுப்பெண் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஓட்டப்பிடாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது சிலோன் காலனி. அங்கு காசிலிங்கமும் அவரது மனைவி லட்சுமியும் வசித்து வந்தனர். காசிலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமி ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு 25 வயதில் இந்துமதி என்ற மகள் இருந்தார். இவர் கோவில்பட்டியில் நர்சிங் படித்து வந்தார்.

இந்நிலையில், இந்துமதியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அதே பகுதியை சேர்ந்த தங்களது உறவினரான ராமசாமி என்பவரின் மகன் வேல்பாண்டியனுக்கு கடந்த 8ந் தேதி திருமணம் செய்து வைத்தார் அவரது தாய் லட்சுமி.
திருமணமாகி 11 நாட்கள் ஆன நிலையில், இந்துமதி நேற்று மதியம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர் தான் அணிந்திருந்த சுடிதார் துப்பாட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி டிஎஸ்பி கோவிந்த ராஜன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இந்துமதியின் உடலை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் கண்ணபிரான் விசாரணை நடத்தி வருகிறார்.
ஏன் இந்துமதி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications