கணவருக்கு வேலை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை..குரூப்-2 தேர்வு வெற்றியை சொல்ல வந்த கணவர் அதிர்ச்சி
தாராபுரம் : கணவருக்கு வேலை இல்லாத விரக்தியில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றதை தனது மனைவியிடம் சொல்ல வந்த என்ஜினீயர் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் என்ஜினீயர் சரவணக்குமார். 23 வயதான. இவரும் திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த கீர்த்திகா என்கிற நந்தினி என்பவரும் காதலித்து கடந்த 9 மாதங்களுக்கு முன் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் கீர்த்திகா தனது பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.

தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காவிட்டாலும் கூட தன்னை நம்பி வந்த மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து சரவணக்குமார், கிடைத்த கூலி வேலைக்கு சென்று அதில் கிடைத்த வருமானத்தை மனைவியிடம் கொடுத்து சந்தோஷமாக இருந்து வந்தார்.
நாட்கள் செல்ல, செல்ல சரவணக்குமாருக்கு கடன் சுமை அதிகரித்தது. பொறியியல் படிப்பு படிக்க வாங்கிய கடன் ஒருபுறம், திருமணம் செய்வதற்காக வாங்கிய கடன் மறுபுறம் என்று கடனை திருப்பி செலுத்த முடியாமல் சரவணக்குமார் மிகவும் சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது.
இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கீர்த்திகா கோபித்துக் கொண்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். பின்னர் பெற்றோர் சமாதானப்படுத்தியதும் மீண்டும் கீர்த்திகா தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
சரவணக்குமாரும், எப்படியாவது நல்ல வேலையில் சேர்ந்து மனைவியை சந்தோஷமாக வைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசின் போட்டித்தேர்வுகளை எழுதி வந்தார். சமீபத்தில் அவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சரவணக்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கீர்த்திகா மட்டும் இருந்துள்ளார். வேலையில் இருந்த சரவணக்குமாருக்கு அவருடைய நண்பர்கள் போன் செய்து டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் அவர் வெற்றி பெற்று விட்டதாக சந்தோஷமான செய்தியை தெரிவித்து வாழ்த்தி உள்ளனர்.
இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்ற சரவணக்குமார், தான் தேர்வில் வெற்றி பெற்ற தகவலை வீட்டுக்கு சென்று தனது மனைவியிடம் கூறவேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால் சரவணக்குமாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் தனியாக இருந்த கீர்த்திகா மனம் உடைந்து சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் அப்போது அவருக்கு கிடைத்தது. இதனால் சரவணக்குமார் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இத்தனை நாட்கள் காத்திருந்து தனக்கு வேலை கிடைத்து விட்டது என்ற செய்தியை சொல்லி மகிழ தனது மனைவி உயிருடன் இல்லையே என்று சரவணக்குமார் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும் தாராபுரம் போலீசார் சென்று கீர்த்திகாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் கீர்த்திகா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் அவர் தனது கணவருக்கு மிகவும் மன வருத்தத்துடன் உருக்கமாக எழுதியிருந்தார்.
அதில் ‘அன்புள்ள மாமாவுக்கு, நீங்கள் இன்னும் அதிகம் படிக்க வேண்டும். நல்ல வேலையில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும். என்னால் உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. இனியும் நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை' என்று எழுதி வைத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications