கரூரில் காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கரூர்: கரூரில் காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள செட்டி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. அவரது மகள் ஜெயலட்சுமி(23). குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த அவர் தன்னுடன் படிக்கும் கரூர் அருகே இருக்கும் நெரூரைச் சேர்ந்த கதிரவன் என்பவரை காதலித்து வந்தார்.
அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் கரூர் அருகே உள்ள அரசு காலனியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி ஜெயலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமியின் தாய் விஜயா போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.