கட்டியை கர்ப்பம் என்று சிகிச்சை கொடுத்த மருத்துவமனை.. மனித உரிமை கமிஷன் அதிரடி நோட்டீஸ்
பெண் ஒருவருக்கு வயிற்றில் கட்டி இருந்ததை கர்ப்பம் என தவறாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை
சென்னை: பெண்ணிற்கு வயிற்றில் கட்டியிருந்ததை கர்ப்பம் என தவறாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வந்த விவகாரத்தை தீவிரமாக கவனத்தில் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசு இந்த பிரச்னை குறித்து இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 28 வயதுடைய ஹசீனா என்ற பெண் சென்னை எழும்பூர் கஸ்தூரி பாய் மருத்துவ மனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி கடந்த 8 மாதமாக சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு இம்மாதம் 8-ம் தேதி பிரசவம் ஆகும் என்றும் மருத்துவர்கள் நாள் குறித்து கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி வயிற்று வலி அதிகமாகவே தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது, அந்த பெண்ணின் வயிற்றில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், அந்த பெண்ணிற்கு வயிற்றில் இருந்த கட்டியினை கர்ப்பம் என கூறி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்துவந்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை சுய வழக்காக எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனை இயக்குனர், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரியான மருத்துவ சிகிச்சை பெறுவது மனித உரிமையாகும்.
இந்த பெண் விவகாரத்தில் தவறாக பரிசோதித்து கடந்த 8 மாதகாலமாக அதற்கான மாத்திரைகளையும் மருத்துவர்கள் அளித்து வந்துள்ளனர். எனவே இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications