பாக். உளவாளி அருண் செல்வராசன்... இலங்கை விரைகிறது என்.ஐ.ஏ குழு.. விசாரணை வளையத்தில் அருணின் காதலி
சென்னை: பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்து பெரும் நாச வேலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராசன் குறித்த விசாரணையில் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி இறங்கியுள்ளது. விசாரணைக்காக இலங்கைக்கு ஒரு குழு செல்கிறது.
இதற்கிடையே, அருண் செல்வராசனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவரது காதலி, வீட்டை வாடகைக்குக் கொடுத்த வீட்டு உரிமையாளர், அக்கம் பக்கத்தில் வசித்து வருவோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அருண் செல்வராசன் குறித்த முழுவிவரங்களையும் திரட்டிடவும் தேசிய புலனாய்வுக் குழுவினர் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இலங்கையிலிருந்து வரும் ஆபத்து
இலங்கையைச் சேர்ந்த சிலர் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எதிராக சதித் திட்டம் தீட்டி செயல்பட்டு வருவது சமீப மாதங்களில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் உளவாளிகளான தமீம் அன்சாரி, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், அவரது கூட்டாளிகளான சிவபாலன், சலீம், ரபீக் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பு வைத்து செயல்பட்ட முகமது உசேன் என்ற உளவாளி மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
சாலிகிராமத்தில் சிக்கிய அருண் செல்வராசன்
இந்த நிலையில் கடந்த 10 ம் தேதி சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில், இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை, மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.
கடல் வழித் தாக்குதலுக்குத் திட்டமிட்ட ஐஎஸ்ஐ
அருண் செல்வராசனிடம், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி கடல் வழியாக மும்பை நகருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியது போல், சென்னை நகருக்குள் கடல் வழியாக தீவிரவாதிகளை ஊடுருவ செய்து, தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் சதித் திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது.
20க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவைக்க திட்டம்
மேலும் தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்கள், துறைமுகங்கள், தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், கல்பாக்கம் அணுமின்நிலையம், சென்டிரல் ரயில் நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்பட 20 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ. தகவல்களை சேகரித்து இருப்பதும் தெரிய வந்தது.
ஈவன்ட் மேனேஜ்மென்ட் மூலம்
அருண் செல்வராசன் சென்னை சாலிகிராமத்தில் ஐஸ்ஈவெண்ட் என்ற ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்திக்கொண்டு பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு உளவு பார்த்து தகவல் சேகரித்துக் கொடுத்து வந்துள்ளார். 5 வருடமாக இந்த வேலையைச் செய்து வந்துள்ளார் அவர்.
கேரளா - ஆந்திராவிலும்
தமிழகம் தவிர கொச்சி, விசாகப்பட்டினம் துறைமுகங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தும், தமிழக கடலோரங்களில் எந்தெந்த பகுதிகளில் எளிதில் ஊடுருவி காரியத்தை சாதித்துவிட்டு, தப்ப முடியும் என்பன போன்ற தகவல்களையும் வரைபடங்களாக தயாரித்து இருக்கிறார்.
ராணுவ மையத்திலும் ஊடுறுவல்
மேலும் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவரிடம் இருந்து அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
பாகிஸ்தான் தூதரகத்திற்கு ரிப்போர்ட்
தான் சேகரித்த தகவல்கள், எடுத்த புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், சிராஜ் ஆகியோருக்கு அருண் செல்வராசன் அனுப்பி வைத்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இலங்கை செல்லும் என்ஐஏ குழு
பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு சென்று அவரைப் பற்றி மேலும் விசாரணை நடத்தவும், அதன் மூலம் கூடுதல் தகவல்களை திரட்டவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர். கொழும்பு நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அவர்கள் அங்கு ஒரு குழுவை அனுப்பி வைக்கிறார்கள்.
மெளனம் சாதிக்கும் இலங்கை
ஆனால் இந்திய விசாரணை குழுவை அனுமதிக்க இலங்கை ஏற்கனவே தயக்கம் காட்டி வருகிறதாம். இதுபற்றி தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பரஸ்பர சட்டஉதவி ஒப்பந்தத்தின்படி, விசாரணை குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க விருப்பம் தெரிவித்தும், சதிகாரர்கள் பற்றிய விவரங்களை கேட்டும் அந்த நாட்டுக்கு கடந்த 10 மாதங்களில் 2 கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன. இரண்டாவது கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் எழுதப்பட்டது. ஆனால் இலங்கை அரசிடம் இருந்து அந்த கடிதங்களுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானைக் காப்பாற்ற முயற்சி
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி அளித்தால் தான் பாகிஸ்தானை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதால் பாகிஸ்தானைக் காப்பாற்றும் வகையில் இலங்கை தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
காதலியிடம் விசாரணை
இதற்கிடையே அருண் செல்வராசனின் காதலி குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. அவருடன் அருணுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவரிடமும் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதேபோல அவருக்கு வீடு, அலுவலகத்தை வாடகைக்குக் கொடுத்தவர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.