சுனாமி நினைவு தினம்- தூத்துக்குடி கடலில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
தூத்துக்குடி: சுனாமி தாக்கியதன் 9வது நினைவு தினம் தூத்துக்குடி கடலோர மீனவ கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோரத்தில் உள்ள மீனவ கிராமங்களை சுனாமி தாக்கியது. இதில் தூத்துக்குடி கடலோர மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பலியாகினர்.
படகுகள், மீன்பிடி பொருட்கள் அனைத்தும் கடலுக்குள் சென்றன. அந்த சுனாமியில் உயிர் இழந்தவர்கள் நினைவாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள மீன் ஏல கூடம் அருகே நேற்று நடைபெற்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், சிறுவர்களும், சிறுமிகளும், பொதுமக்களும் சங்க முக கடல் பகுதியில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியால் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேம்பார் கடற்கரை பகுதி முதல் திரேஸ்புரம் வரை வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும் தூத்துககுடியில் உள்ள சமூக சேவை அமைப்பில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திரேஸ்புரம் குழந்தை திரேசால் ஆலயத்தில் சுனாமியில் இறந்தவர்களுக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஊர்வலமாக திரேஸ்புரம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனால் அந்த பகுதியே சோகமாக இருந்தது.












Click it and Unblock the Notifications