குன்னூருக்குள் குவிந்த சுற்றுலா பயணிகள்.. இன்று சிம்ஸ் பூங்காவில் 65வது பழகண்காட்சி.. கோலாகல நீலகிரி
ஊட்டி: கோடைவிழாவின் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று 23ம் தேதி முதல் வருகிற 26-ந்தேதி ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சியானது நடைபெற உள்ளது. இதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.. ஏற்கனவே ஊட்டி மலர்க்கண்காட்சி நடந்து வரும்நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் கோடை விழா ஆரம்பமாகியிருப்பதால், சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்து வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு, இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

அந்தவகையில், உதகையில் 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே 15ம் தேதி தொடங்கி வைத்தார். வருகிற 25-ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்கா
இதில் 2 லட்சம் மலர்களால் ஆன அரண்மனை, 15 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ராஜ சிம்மாசனம், கரிகாலன் கல்லணை, ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்ன பறவை, ரதம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள், கார்னேசன் மலர்கள், ரோஜா, கிரைசாந்திமம் உள்ளிட்ட மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நாட்களில் பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காகவே இப்பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் உள்ள நிலையில், பூங்கா சிறப்பாகப் பராமரிக்கப்படும்.. அந்தவகையில், இந்த ஆண்டு விழாவுக்காக, 1,000-க்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் தொட்டியில் நடவு செய்யபட்டு, பராமரிக்கப்பட்டன.
கண்காட்சி துவங்குகிறது
இந்நிலையில், இன்று கண்காட்சி தொடங்குகிறது. சிம்ஸ் பூங்கா உருவாகி 151-வது ஆண்டு என்பதால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா நுழைவாயில் முன்பு 30 வகையான பழங்களை கொண்டு அலங்கார நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது..
சுற்றுலா தலங்களில் உள்ள காட்சிகளை பழங்கள் மூலம் தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. பூங்கா நுழைவாயில் உள்ளே சுமார் 5 டன் எடையில் ஆன பழங்களை கொண்டு சுற்றுலா பகுதியில் உள்ள ரம்மியமான காட்சிகளை நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
பழக்கண்காட்சி
மேலும் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணைகளில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும் சிறப்பு அரங்குகள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது. 3 நாள் நடைபெற உள்ள பழக்கண்காட்சி இன்று துவங்குகிறது.. பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு நடவு செய்யப்பட்ட 3 லட்சம் மலர் செடிகள் அனைத்தும் கண்ணை கவர்ந்து வருகின்றன..
3 நாள் நடைபெற பழ கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் நாவில் உமிழ் நீர் சுரக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட வகையிலான பழ வகைகள் இடம்பெற உள்ளன.. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளதால், குன்னூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.












Click it and Unblock the Notifications