திமுக, அதிமுக, உடன் கூட்டணி இல்லை… கொட்டும் மழையில் வைகோ பிரச்சாரம்
ஈரோடு: லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக உடன் கூட்டணி கிடையாது, சுயமரியாதையுடன் தேர்தலை சந்திப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ‘‘மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம்'' மேற்கொண்ட வைகோ இவ்வாறு தெரிவித்தார்.
கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையத்தில் இருந்து நேற்று மாலை வைகோ தனது பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்துக்கு ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த பயணத்தின்போது வைகோ வெள்ளோட்டம் பரப்பு, சாணார்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பாசூர், கொம்பனை, ஊஞ்சலூர், கொடுமுடி உள்பட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். கொட்டும் மழையிலும் வைகோவின் பேச்சை கேட்க மக்கள் காத்திருந்தனர். மக்களிடையே பேசிய வைகோ கூறியதாவது:

காங்கிரஸ்தான் காரணம்
இலங்கை தமிழர்கள் இப்போது படும் அவதிக்கும் அழிவுக்கும் காரணமே மத்தியில் ஆளும் காங்கிரஸ் தான். இப்படி முக்கிய குற்றவாளியாக காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் இருக்கும்போது அவர் எப்படி இலங்கைக்கு செல்ல முடியும்?

தமிழர்கள் தடுத்துவிட்டார்களா?
இலங்கையில் போரை நடத்தியதே இந்தியாதான். இப்படி இருக்கும்போது அவர் இலங்கைக்கு போய் எப்படி தமிழர்களிடம் குறைகளை கேட்பார்? அவர் இலங்கை செல்வதை தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் தடுத்து விட்டன என்று கூறுகிறார்கள்.
இலங்கை போருக்கு காரணமாகவும், தமிழர்களின் அழிவுக்கு காரணமாகவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்று இருக்கும்போது பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு சென்று என்ன பயன்தான் கிடைக்கப் போகிறது?

பன்னாட்டு விசாரணை
இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் மனித உரிமைகள் குறித்து சுதந்திரமான உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இல்லையென்றால் பன்னாட்டு விசாரணை நடத்த இங்கிலாந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி உள்ளார். ம.தி.மு.க.வும் ஆரம்பத்தில் இருந்தே இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஒப்பிட முடியாது
இலங்கையில் 48 வருடத்துக்குப் பிறகு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கை வந்துள்ளார். 2008-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நான் பேசி உள்ளேன். இதையொட்டி இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உள்ளார். இது நல்ல விஷயம். அவருடன் இந்திய பிரதமரை ஒப்பிட்டு பார்க்க கூடாது. கேமரூனுடன் மன்மோகன் சிங்கை ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது.

பூக்களை சுமக்கும் காலம்
நான் எனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் என் சகாக்களுக்கு கொடுத்தேன். முள்களை சுமக்கும் காலங்கள் போய் இன்று என் மனதை பூக்களால் வருடுகிறேன். இங்கு இயக்கத்தில் இருந்து வேறுபாடு இன்றி ஒரே கருத்தோடு பயணிக்கின்றோம்.

சட்டமன்றமே இலக்கு
வரும் பாராளுமன்ற தேர்தல் எங்களது இலக்கல்ல. ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் வகுக்கும் வியூகம் நாடாளுமன்றத்தையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது முழு பலத்தை பயன்படுத்தி அதற்கான இலக்கை அடைவோம்.

அதிமுக – திமுக வேண்டாம்
அண்ணாவின் பெயரையும், பெரியாரின் பெயரையும் உச்சரிக்க தகுதி உள்ள ஒரே கட்சி நமது இயக்கம் மட்டும்தான். அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளுடன் என்றும் உறவு கிடையாது. சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் தேர்தலை சந்திப்போம். வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் மீண்டும் கணேசமூர்த்திதான் போட்டியிடுவார். அவரை வெற்றிபெற செய்யுங்கள் என்று பேசினார் வைகோ.












Click it and Unblock the Notifications