புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவ கழிவுகள்.. தொற்றுநோய் பீதி.. அலறும் மக்கள்!
அரசு மருத்துவ கல்லூரியின் கழிவுகளால் தொற்றுநோய் அபாயம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால் கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்ததோடு 269 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார்.
இதனையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமாக புதுக்கோட்டை இருப்பதால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 9 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தன.

பெரும் சிரமத்தில் பொதுமக்கள்
புதிதாக கட்டப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் தொடங்கி வைத்ததோடு கடந்த ஆண்டே 150 மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. மேலும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு இடையே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் ராணியார் மகப்பேறு மருத்துவமனையும் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

துர்நாற்றம் வீசும் மருத்துவ கழிவு
இந்நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை மருத்துவ கல்லூரி அருகேயுள்ள முள்ளூர், வாகவாசல் உள்ளிட்ட கிராமத்திற்குள் செல்வதோடு குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்
இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர், மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக மருத்துவ கல்லூரிக்குள் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ கல்லூரி தொடங்கியதிலிருந்தே இது செயல்படாமல் உள்ளது.

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்
மருத்துவ கல்லூரியிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுநீர் கிராமத்திற்குள் சென்று குடிநீருக்காக பயன்படுத்தும் குளங்கள் மற்றும் விவசாய நிலத்திற்குள் போய் சேர்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே அதுவும் அவரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ கல்லூரியின் அவல நிலையை மாற்ற உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications