பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க மறுத்ததாக மத்திய அரசிடம் இருந்து தகவல் இல்லை: சன் டி.வி.
சென்னை: சன் குழும தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க மறுத்ததாக மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை என்று சன் டி.வி. விளக்கம் அளித்துள்ளது.
சன் டி.வி. நிறுவனத்தின் 33 தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சன் டிவி அதிபர் கலாநிதி, சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி சான்றிதழை வழங்க மறுத்தது.
இதனால் சன் டி.வி.யின் 33 சேனல்களின் ஒளிபரப்பு லைசென்ஸ் ரத்தாகும் நிலை ஏற்பட்டது. இன்று இன்றைய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் சன் டிவி பங்குகள் 28% வரை சரிவை சந்தித்தன.
இதனைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தைக்கு சன் டி.வி. அனுப்பியுள்ள விளக்கத்தில், பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாக மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.
எங்கள் குழுமத்தின் சேனல்கள் தடையின்றி தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.