பருவமழை பொய்த்ததன் எதிரொலி… தலை தூக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
நெல்லை: வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுபாடு தலை தூக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்தது. இதனால் வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் தென் மாவட்டங்களில் கோடை போல் வெயில் கொளுத்தியது. இதுவரை இல்லாத அளவுக்கு செப்டம்பரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல குளங்கள் வறண்டன. அணைகளின் நீர்மட்டமும் வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. பிரதான அணைகளில் பாபநாசம் அணையின் நீர்மட்டமும் 13 அடியாக சரிந்தது. இதனால் இரு மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுபாடு தலை தூக்கி வருகிறது. மணிமுத்தாறு அணையின் மூலம் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நடவு செய்திருந்தனர். ஆனால் மழை தொடங்கிய வேகத்தில் காணாமல் போனது. உருவான இரண்டு புயல்களால் சிறு தூறல் மட்டுமே இப்பகுதிகளில் கிடைத்தது. இதற்கிடையே பனிபொழிவு அதிகரித்துள்ளதால் இனி மழை வருமா என்பது கேள்வி குறியாக உள்ளது.
இரண்டு பருவமழைகளும் ஏமாற்றி விட்டதால் மாவட்டத்தில் அனைத்து அணைகளும் பரிதாப நிலையில் உள்ளன. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுபாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications