நட்பு கூட்டணி காலம் மலையேறிவிட்டது... ஆட்சியில் பங்கு வேண்டும்... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: நட்பு கூட்டணி என்ற காலம் எல்லாம் இப்போது முடிந்து விட்டது. ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடனே கூட்டணி சேருவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இளங்கோவன், இவ்வாறு கூறியுள்ளார்.
கூட்டணி அமைப்பது தொடர்பாக இப்போது எந்த நடவடிக்கையும் நாங்கள் ஆரம்பிக்கவில்லை என்றும் தேர்தல் நெருங்கும்போது, அப்போது உள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு, உரிய தேவைகளை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்போம் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நிபந்தனை விதிப்போம்
எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சகோதரத்துவம் முறையில் கூட்டணிகளை ஏற்படுத்துவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி கருத்து கூறியுள்ள இளங்கோவன், நாங்கள் இதில் தெளிவாக இருக்கிறோம். யாருடன் கூட்டணி அமைத்தாலும் நாங்கள் சில நிபந்தனைகளோடு தான் கூட்டணி சேருவோம்.

ஆட்சியில் பங்கு
கூட்டணி அரசில் பங்கு அளிக்கவேண்டும் என்பதும் ஒன்றாக இருக்கும். எங்களுடைய நிபந்தனையை ஏற்காத எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்.

நட்புக்கூட்டணி
நட்பு கூட்டணி என்ற காலம் எல்லாம் இப்போது முடிந்து விட்டது. அதே நேரத்தில் மதசார்பின்மையை காப்பாற்றுவதற்காக நாங்கள் கைகொடுப்போம். மேலும் மது விலக்கை அமல்படுத்த சம்மதிக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி சேருவோம்.

பாமக மனநிலை
சில நாட்களுக்கு முன்பு அன்புமணி அளித்த பேட்டியில் கூட்டணி கட்சிகளுடன் சில சமரசங்களை ஏற்படுத்திகொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க அவர்களும் இறங்கி வருவார்கள். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

முதல்வர் வேட்பாளர்
எல்லோருக்கும் முதல்வர் கனவுகாண உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையும் இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும். காங்கிரசை பொருத்தவரை தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் பழக்கம் இல்லை.

விஜயகாந்த்தின் நிலை
விஜயகாந்த் பேசுவது சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வை தீவிரமாக எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அவருடைய கட்சி உள் விவகாரமாகும். தே.மு.தி.க.வினால் நாங்கள் பலவீனமடையவில்லை. அடிமட்ட அளவில் நாங்கள் இப்போதும் வலுவாகவே இருக்கிறோம். மீண்டும் எழுச்சியுடன் திரும்ப வருவோம் என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications