விஜயகாந்தை "கிங்" ஆக ஏற்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை: முரளிதரராவ்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தங்கள் கூட்டணியின் "கிங்" ஆக ஏற்பதில் பாஜகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இணையதளம் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் 'கிங்' ஆக ஏற்பதில் பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. கூட்டணிக்காக தேமுதிகவுடன் எந்த போட்டியும் இல்லை. தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையைத் தான் தேமுதிக ஏற்க வேண்டும் என்பது இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும் காஞ்சிபுரம் மாநாட்டில், தேமுதிக யாருடைய கூட்டணியிலும் இருப்பதாக கூறவில்லை என்றும், பல்வேறு தரப்பினர் அழைப்பதை போல், தாங்களும் தேமுதிகவை அழைப்பதாகவும் முரளிதரராவ் கூறினார்.
இதேபோல் பாஜக தலைமையகமான கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் தேமுதிக -திமுக கூட்டணி வெறும் கற்பனையே என்றும், பலம் பொருந்திய கூட்டணியாக தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications