யாரும் என்னை ஆதரிக்கவில்லை, எனக்கு கவலையும் இல்லை... டிராபிக் ராமசாமி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்னை ஆதரிக்குமாறு நான் பல கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் ஆதரவு தரவில்லை. இருப்பினும் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று டிராபிக் ராமசாமி உள்பட 5 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
ராமசாமி தவிர மனுத் தாக்கல் செய்த மற்ற நால்வர்: பத்மராஜன், ரவி, ஆப்ரகாம், அகமது ஷாஜகான் ஆகியோர் ஆவர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் டிராபிக் ராமசாமி பேசினார். அப்போது அவரிடம், உங்களுக்கு எந்தக் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், நான் ஆதரவு தரும்படி கேட்ட கட்சிகள் ஆதரவு தரவில்லை. என்றாலும் எனக்கு கவலை இல்லை. நான் மக்களை நம்புகிறேன். மக்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றார்.
ஜூன் 10ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.