வருமான வரிச்சோதனையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை: வெங்கையா நாயுடு
தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லை என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித் துறை சோதனையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும் மத்திய அரசுக்கும் இந்த சோதனைகளுக்கும் சம்பந்தமும் இல்லை எனவும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை.
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கடமையை மட்டுமே செய்தார்கள். சோதனை சரியான முறையில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டில் நடைபெற்ற சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழக முதல்வரிடம்தான் கருத்துக் கேட்க வேண்டும்.
ராம மோகனராவின் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புகிறார். அதுபற்றிய கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரை எனக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கருத்துக்களை அவர் பேச வேண்டாம் என்று அறிவுருத்துகிறேன்.
இந்த விவகாரத்தில் அவர் அமைதியாக இருப்பதே நல்லது. இல்லையென்றால் மேலும் சிக்கலாக மாறிவிடும். அவரது வீட்டில் இருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றால் சட்டம் இருக்கிறது. சட்டத்தை அனுகி அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்பது 50 நாட்களில் நிறைவேறாது என கூறினார். பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு எதிர்புகள் அதிகம் உள்ளதால் வெகு விரைவில் நிலைமை சீராகும். கருப்புப்பண ஒழிப்புக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையை அடையும் என்றார்.