ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவை கேட்கவில்லை: தேமுதிகவிற்கு அழைப்பு- கருணாநிதி
சென்னை அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி: உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையைக் குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: தூக்குத் தண்டனை கூடாவே கூடாது என்று இன்று நேற்றல்ல ; நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே சிக்கி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனு தாக்கல் செய்துள்ள நிலையில் சிறையிலே இருக்கும் மூன்று பேருக்கும் இந்த தண்டனை பொருந்துமா?
கருணாநிதி: அவர்களுக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில் முடிவு வெளிவந்தால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
கேள்வி: மு.க. ஸ்டாலின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி, சொத்துக் குவிப்பு வழக்கிலே சிக்கியுள்ள அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தார். அதுபற்றி உங்கள் கருத்து?
கருணாநிதி: பொதுவாக மக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.
கேள்வி: ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க வேட்பாளர் திருச்சி சிவாவுக்கு நீங்கள் எந்தெந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்கப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சியிடம் கேட்கின்ற உத்தேசம் இருக்கிறதா?
கருணாநிதி: இல்லை.
கேள்வி: தே.மு.தி.கவிடம் ஆதரவு கேட்கப்படுமா?
கருணாநிதி: பொறுத்திருந்து பாருங்கள்.
கேள்வி: ராஜ்யசபா எம்பி பதவியை தே.மு.தி.கவுக்கு திமுக விட்டுக் கொடுத்தால், நாடாளுமன்றத் இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாக வாய்ப்பாக இருக்குமென்று கருத்து சொல்லப்படுகிறதே?
கருணாநிதி: விஜயகாந்த் தலைமையிலே உள்ள தே.மு.தி.கவிற்கும், தி.முகவுக்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அப்போது நீங்கள் தெரிவித்த கருத்தும் பரிசீலிக்கப்படும்.
கேள்வி: மனித நேய மக்கள் கட்சி சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் விஜயகாந்தைச் சந்தித்து, தே.மு.தி.க. இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்களே?
கருணாநிதி: அவர்களுடைய நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.
கேள்வி: தே.மு.தி.கவிற்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்கலாமே?
கருணாநிதி: எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித்திருக்கிறோம்.