வாட்டி எடுத்த வர்தா.. செல்போன் சேவை முற்றிலும் முடங்கியது.. சென்னை மக்கள் பாதிப்பு !
மின்சாரம் இல்லாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயலின் பாதிப்பால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் செல்போன் சேவை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. அதிலும் புறநகர் பகுதி மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையை புரட்டி போட்ட வர்தா என்ற புயல் திங்கட்கிழமை கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் கனமழை பெய்தது. மேலும் சூறைக் காற்று வீசியது. சென்னை வரலாற்றில் முதல்முறையாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகத்தில் உருக்குலைந்த மரங்கள் வேரோடு சரிந்து விழந்தன. இதனால் திங்கட்கிழமையில் இருந்து சென்னையில் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பால் சென்னை மக்களிடையே தொலைத்தொடர்பு தகவல்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சில இடங்களில் மட்டும் தரைவழி பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்த முடிந்தது. செல்போன் சேவைகள் முடங்கியதால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிலும் இன்று பெரும்பாலானவர்களின் செல்போன்களில் "ஜார்ஜ்" தீர்ந்து போனது. இதன் காரணமாக வாட்ஸ்அப் தகவல்களை பெற முடியவில்லை. செல்போன்களின் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போனதால் பலரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உள்ளனர்.
சிலரிடம் செல்போனில் ஜார்ஜ் இருந்தும் பயன்படுத்த முடியாத சோகம் நிலவியது. ஏனெனில் சென்னையில் உள்ள பெரும்பாலான செல்போன் டவர்கள் மின்சாரம் இல்லாததால் அதன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னல் பிரச்சினையாக இருக்கிறது.
குறிப்பாக புறநகர் வாசிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக அவர்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இதனால் சென்னைவாசிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். புறநகரைப் பொறுத்த வரை மின்சேவையை சரிசெய்ய இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என மின்துறை அமைச்சர் கூறியிருப்பது புறநகர் வாசிகளை மேலும் கவலைக்கு உள்ளாகியுள்ளது.