தமிழகத்தில் இலங்கை ராணுவத்துக்கு ராணுவ பயிற்சி அளிக்கமாட்டோம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர்
அரக்கோணம்: தமிழகத்தில் இலங்கை ராணுவத்துக்கு ராணுவ பயிற்சி அளிக்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் கடற்படை தளத்தில் நாட்டின் கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட பி8ஐ போர் விமானங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இலங்கை ராணுவத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ளது. ஆகையால் வெலிங்டன் உள்ளிட்ட ராணுவ பயிற்சி மையங்களில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கமாட்டோம்.
ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவோம் என பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது. இதில் உறுதி அளித்திருப்பது மத்திய அரசு அல்ல.
இந்தத் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி முன்னாள் ராணுவத்தினர் விருதுகளை திருப்பிக் கொடுப்பதும் எரிப்பதும் துரதிருஷ்டவசமானது. இது நாட்டை அவமதிக்கும் செயலாகும்.
இத்தகைய நடவடிக்கைகளில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.